பிரிய சிநேகிதி...!

பிரிய சிநேகிதி,
மன்னிப்பாய்...!

மெளனத் தவம்
கலைத்துச்
சகுனம் பார்க்காது
காதலென்னும் மாய
வார்த்தை சொன்னேன்!

உள்ளம் மூடி
வைக்காது...
பள்ளம் விழுந்ததடி
உன் பார்வை
பட்டென்றேன்

நீயும் பட்டென
பதில் சொன்னாய்
என்னைச் சட்டென
வெட்டி விட்டாய்

சட்டென
தேறிவிட்டேன்
வெளியில் சிரித்தவாறு
ஆனால் உள்ளம்
இன்னும்
வலியில் அழுதவாறு

வெள்ளமென
உவகை தோன்றுதடி
உன்னோடு இருக்கும்போது!

இதற்குப் பெயர்
காதலென்று
அர்த்தம் செய்தேன்!
கடைசிவரை
குற்றம் செய்தேன்!

உன் கனவுக்
கட்டிட வாசலில்
கூட நிற்கத்
தகுதியிருக்குமா எனக்கு?

நீ நுழைவுத் தேர்வு
நடத்தவில்லையே
சிநேகிதி...

ஆனாலும் சிநேகிதி
என் அன்புக்
கூட்டுக்குள் நீ
இன்னும்
சிட்டுக் குருவிதான்!

நீ அதிலிருப்பதும்
தூரப் பறப்பதும்
உன் சிறகுகளிடம்...

வாழ்க்கைப் பாதையில்
முகம் மறக்கலாம்
முகவரி மறக்கலாம்
என் அன்பு தடவிய
வார்த்தைகளை
நினைத்துப் பார்
நேரம் கிடைக்கும்
போதெல்லாம்

நேற்றைய
பொழுதெதற்கு
என்று
சாட்டையால்
அடிக்காதே...

கடந்த காலங்களின்
கனவுகள் முக்கியம்!

என் வார்த்தைகளில்
சில சமயம்
வாள்கள்
கட்டியிருப்பேன்
உன்னைக்
காயப்படுத்தவல்ல...
கடைசி வரை
என்னை
ஞாபகப்படுத்த...

பிரிய சிநேகிதி
நான் உன்னை நேசிக்கிறேன்
நீ நேசிக்காதபோது கூட
ஏனெனில்,
நீ மட்டும் தான்
என்னோடு
சிநேகிதம் செய்வாள்!

அழகில்லாதவன்
நான்!
உண்மை தான்
'அழகில்' ஆதவன்
இல்லை!

சிநேகிதி உன்போல்
இன்னும் பலர்
எனை வேண்டாம்
என்று வெறுக்கட்டும்

சோகமே எனக்குச்
சொந்தமாகட்டும்!

காயம்
பெருக்கட்டும்

முட்டாள் நான்
கூட கவி
புனைவேன்

என் கவிகளே
எனக்குத் தலைகோதி
விழி நீர் துடைக்கட்டும்

இதை நீ
'கவிதை' என்கிறாயா
சிநேகிதி..?
'ஆம்' எனில்
நீ 'வேண்டாம்'
என்றதில் கூட
அர்த்தமுண்டு

நல்லது
சிநேகிதி...

தயவுசெய்து
என்னை
மன்னித்துவிடு

மன்மதனுக்கு
ஒரு மரணம்
வராதோ?

___________
யாழ் களத்தில் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=21491

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

ஒலி வடிவம்

வருக புத்தாண்டே...