Posts

என்னத்தை சொல்ல...?

இடம் தெரியாா் தரம் புரியாா் தகுதி கிடையார் பதவி வேண்டி வலம் வருவார் கிடைக்காது போனால் முகம் சுளிப்பார் காறி உமிழ்வார் இச்சனம் போல் எங்கேனும் கண்டதுண்டா? இலக்கு தான் முக்கியம் நம்மவர் செருக்குக் காட்டி "அவனா தலைவன்..." என கவனில் கல் வைத்தடிப்பார்! எதிரில் பல் இழித்து "ஐயா உம் போல் எவருண்டு..." என்றே நெளிவார்! "எனக்கேன் இல்லை அழைப்பு?" என்றே ஆயிரம் கேள்வி தொடுப்பார் அழைத்தாலோ பல கதை சொல்லிப் புளுகுவார்! பிரிந்து நின்று பருந்து போல் மொய்கின்றார் கூடிச் சேர்ந்து எறும்பு போல் அணிவகுக்க மறுக்கின்றார்! கூடிப் பலர் தேர் இழுக்காவிடின் சாமிக்கேது ஊர்வலம்? ஆசாமி இவனே சாமி ஆக நினைத்தால் அதுவன்றோ அநியாயம்! நோக்கம் ஒன்று அதை நோக்கி நடத்தல் நன்று! தன்னால் இயன்றதை தான் செய்யின் எல்லாம் சரியாகும் முடியாது போனால் கை தட்டுங்கள் தானாய் நடக்கும் எல்லாம்!

பிள்ளைத் தமிழ்!

கற்ற தமிழ் நான் மறந்தேன் உன் பிள்ளைத்தமிழ் கேட்கையிலே! சொற் தமிழில் எத்தனை சுவை இறைவா இவள் சின்ன இதழில் அது பிறப்பதாலே! அப்பன் மடியில் அமர்ந்து பிரணவப் பொருள் உரைத்தான் பால முருகன் அன்று குப்பன் இவனும் இன்று அப்பேறு பெற்றானே ஆனால் பொருள் தான் எதுவும் விளங்கலையே! விளங்காத போதும் குறையாத இன்பம் எனக்குள் நிறைகிறதே வாழ்வதின் இன்பம் இது தான் எனப் புரிகிறதே!

அணையா(த்) தீ!

Image
நீ எந்தன் வானம் நான் உந்தன் நீலம் ஏனிந்தக் கோலம் என் உயிரின் ஓலம் கேட்காதோ உந்தன் காதும்? கனவில் வருகிறாய் மலர்கள் சொரிகிறாய் எதிரில் மட்டும் ஏனோ என்னை எரிக்கிறாய்! நெஞ்சத்தில் உன்னை வைத்தேன் தீயென்று தெரியாது விட்டேன் அணைப்பது எவ்வாறு நீ வந்து அணைத்தாலும் அணையாது வளரும் தீ இது!

இன்றைய பொங்கல்!

Image
நண்பர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! மேலிருந்து சூரியன் பார்த்திருக்க சுற்றி நின்று சுற்றத்தார் காத்திருக்க முற்றத்தில் அடுப்பு மூட்டி புதுப் பானை அடுப்பேற்றி பொங்கியது உண்டு ஊரில்! அவ்வழக்கம் இங்கில்லை இப்போது! உள்வீட்டில் பொங்கல் பாவம் சூரியன் பல முறை எட்டிப் பார்த்தும் பொங்கல் பானை பார்க்கும் பாக்கியம் இல்லை அவனுக்கு! சுற்றத்தார் எங்கிருந்தோ குறுஞ்செய்தி, தொலைபேசி முகப்புத்தகம், ருவீட்டர் என பல வடிவில் "Happy Pongal" என்றார்! ஏன் பொங்குகிறோம் என்று அறியார் பலர் ஏதோ பொங்குகின்றார் ஏற்பாடுகள் ஏட்டிலே தங்கிவிட பொங்கல் பானையில் தங்கிவட உள்ளங்கள் பொங்குவதில்லை இங்கே உவகை அதில் நிறைவதில்லை பிள்ளை கேட்பான் "ஏன் அம்மா பொங்கல்?" அம்மாவுக்கே அது தெரியாத போது எங்கிருந்து அவள் உரைப்பாள் "அப்பாவிடம் கேள்..."  என்பாள் ஓடியே போவான் பாவம் அவன்!

கந்தக விரல்

Image
எங்கோ ஒரு மூலையில் சிரிப்பைத் தொலைத்து கந்தக விரலுக்கு சொந்தக் காரி ஆகிறாள் ஒருத்தி! வெடித்துச் சிதறும் பல வண்ணப் பட்டாசுகளை கண்டு துள்ளிச் சிரிக்கிறார் இங்கே பலர்! மறவாதீர் அவள் பட்டாசுகளில் பலவாறு சிரிக்கிறாள் சிறு நொடியில் சிரிப்பைத் தொலைத்தும் விடுகிறாள்! வாழ்க்கை எவ்வளவு முரண்பாடு ஒருத்தியின் சிரிப்பைத் தொலைத்த உதடுகளை பார்த்த பின்னும் எவ்வகைப் பட்டாசு வாங்கலாம் என்றே எண்ணமிடுகிறது மனசு!

கார்த்திகை இருபத்தேழு!

நெஞ்சங்கள் தோறும் ரணங்களைச் சுமந்து நிற்கின்றோம் கல்லறை வீரர் காலடி பணிகின்றோம் நாளிது கார்த்திகை இருபத்தேழு! களமாடி ஈழக் கடமை செய்த உயர் வீரா் நினைவேந்தும் நாள்! மாடி வீட்டில் இருந்து நாம் வேடிக்கை பார்த்தபோது ஓடி ஒளியாமல் வாடிச் சாகாமல் பகை தேடிப் புறப்பட்ட மற வீரர் நினைவை மனதில் ஏந்தும் நாள்! சிவப்புத் தோல் போர்த்திய நரிகள் தமைச் சிங்கங்கள் என்றெண்ணி எமைச் சூழ்ந்து அசிங்கங்கள் செய்த போது பாயும் புலியானவர்கள் பச்சைத் துரோகத்தால் பலியானவர்கள்! சாவை எந்நேரமும் சட்டைப் பையில் சுமந்தவர்கள் தலைவன் நாவை அசைத்தால் நாற்றிசையும் பாய்ந்து எம் மண்ணின் மானம் காத்தவர்கள்! முறத்தால் புலியை விரட்டினாளாம் பண்டைச் தமிழச்சி! எம் தலைவன் ஊட்டிய வீரத் திறத்தால் பகையை வாட்டினார்கள் எம் குலப் தமிழ்ப் பெண்கள்! பூச்சூடி பொட்டிட்டு பூவிதழில் புன்னகை மலரவிட்டு மென்மையின் வடிவானவர்கள் தாம்...

எரியட்டும் பெரு நெருப்பு!

Image
வீடெங்கும் ஒளி வெள்ளம் மலரட்டும் நமது உள்ளம் நரகாசூரா்கள் வெளியில் இல்லை உனக்குள்ளே சிரிப்பர் பல அசுரா்! தீபங்கள் பல பற்ற வை மள மளவென எரியட்டும் பெருந்தீயாய் பரட்டும் உள்ளமெனும் காடு எரிகின்றபோது மிருகங்கள் பல தெறித்தோடும்! இப்போது உனக்குள்ளும் கேட்கும் கண்ணனின் புல்லாங்குழல் ஓசை!