யாழ் களக் கிறுக்கல்கள் - IV
கிறுக்கல் 11:
மாறும் எல்லாமே
ஒரு நாள் மாறும்
மாற்றம்
என்பதைத் தவிர
சீறும் புலியின்
சீற்றத்தின் முன்னே
சீயங்கள் (சிங்கங்கள்)
சிதறி ஓடும்
ரணங்கள் ஆறும்
வாழக்கை
ரம்மியமாய் மாறும்
ரகசியமாய்ச்
சேர்த்து வைத்த
என் ஈழக் காதல்
ஐ.நா வில் முழங்கி
உலக வீதியில்
கேட்கும் ...
ஈழம் இன்னொரு
சிங்கப்பூராய்
ஆகும்
எதுவும் தூரமில்லை
எழுந்து நடந்தால்!
-----------------
கிறுக்கல் 12:
அரங்கேறும் என்பாடல்
ஒருநாள்
தமிழ்கூறும் உலகெங்கும்
எழுந்தாடும்
திருநாள்
மரமேறும் மந்தியும்
மகிழ்தாடும்
பலவேறு புதினங்கள்
எனைப் புகழ்ந்தெழும்
ஒருவாறு தமிழ்
உலகாளும் - நாம்
உரையாடும்
பாஷை
தமிழாகும்
அழகுத்
தமிழாகும்!
-----------------
கிறுக்கல் 13:
வாங்கித் தா
ஈழத்தை
தூக்கத்திலும்
துட்டர் பயம்
வந்தெழுப்பி
'வா' வென்று உறுமி
வசை மொழி பேசி
வரிசையாய் ஏற்றுகின்றார்
பஸ்சில்...
வாழ வழியில்லையாம்
கொழும்பில்
கோழைகாள்
எம்மையடா
துரத்துகின்றீர்?
எமனின் கரம்
தொட்டா விளையாடுகின்றீர்?
சிவப்புத் தோல் போர்த்திய
வெள்ளை நரியே
ஈழத்தின் வீதியெங்கும்
சிவப்பை அள்ளித்
தெளிக்கின்றாய்
சிந்திக்கும் திறன்
மறந்தாய்
அலரி மாளிகையில்
குளறி அழுவாய்
பொறு!
ஈழமே
உன் பெறுமாதம்
நெருங்குகின்றது
காலமே
சுகப் பிரசவம்
நடக்கும்
வகை செய்வாய்
உலகமே
குந்தியிருந்து
குறட்டைவிட்டு
கனவில் விழித்து
'ஆ' வென்று கேட்காதீர்
குழந்தைக்கு
வாழத்துச் சொல்வீர்
அங்கீகரிப்பீர்
முடியாவிடின்
ஊமையாவீர்
எம் விதியை
நாமே வரையும்
பிரமாக்களாவோம்!
Comments