மனசு எனும் மந்திரக்கிண்ணம்!

ஒலி வடிவம் :




நெஞ்சில்
ஓர் மூலையில்
ஏதோவொரு சோகம்
எனை அணைக்கும்

உடம்பு
சோர்வின்
கைப் பிள்ளையாகும்!

மனசு
விரக்தியின் விளிம்பில்
தற்கொலை செய்யும்

எதிர்காலம் கண்முன்
விஷ்வரூபமெடுக்கும்

தனிமையில் தத்தளித்து
தாய் மடி
தேடும் மனம்

பொல்லாத கற்பனைகளால்
இதயம் வெடிக்கும்

தலை கோதி
நெஞ்சில் முகம்
சேர்த்து
அணைக்க
ஓருயிர் வாராதா
என விழிகள் தேடும்!

"எனக்கு மட்டும்
ஏன் இப்படி"
கண்முன் தெரியா
கடவுளிடம்
விசாரணை நடக்கும்

கால் போனால்
ஊன்றுகோல்

மனசு உடைந்தால்
என்ன உதவும் ?

"நம்பிக்கை" என்ற
பழகிப்போன பதிலில்
சமாதானம் ஆகாமல்
போலியாய் சிரிக்கும்
உதடுகள்...

விநாடிகளை விழுங்கி
காலம்
கன கதியில் பறக்கும்!

சூரிய தேவன்
இரதமேறி
ஒளிக்கைகளால்
பூமிப்பெண்ணை
தொடுவான்

மனசு இலேசாகிப்
பஞ்சாகப் பறக்கும்!

'ம்..."
புரியவில்லை தான்
எனக்கும்!

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்