நினைவுக் கவிதை [19-07-2007 மூன்றாம் ஆண்டு நினைவு]

சின்னப் பெண்ணே
நீ மறைந்து
மூன்றாண்டாம்

உன் நினைவு
மட்டும் எப்படி இன்னும்
எல்லோர் மனதிலும்
முரண்டு பிடித்து
முக்காலி போட்டு
உட்கார்ந்து இருக்கின்றது?

பக்கத்தில் இருந்து
பார்த்துப்
பழகியறியாதவன்
நான்...
இருந்தும் செவிவழி கேட்டு
நிழற்படத்தில் பார்த்துத்
தெரிந்த எனக்குள்ளும்
எப்படி நீ விஷ்வரூபமானாய்?

வாழ்க்கை
விசித்திரம் தான்
வந்து போகும்
உறவுகளும் அப்படியே...

யாரோ
கிழித்த கோட்டில்
நீயும் நானும்
எப்படிச் சொந்தங்களானோம்?

சாவு அருமையான
விஷயம்!

இறப்பது தெரிந்தும்
'நிரந்தர இருப்பு'
அனுமதி பெற்றது போல
செய்யும் செயல்களில்
தான் எத்தனை
முரண்பாடு?

குட்டிப் பெண்ணே
நினைவுச் செதில்கள்
குற்றி
கண்கள் குளமாகின்றது
உண்மை தான்
ஆனாலும்
வெறும் வார்த்தை
ஜாலங்களில்
பாசாங்கு செய்யப்
பிடிக்கவில்லை

மறுபிறவி
உண்டெனின்,
எனக்கு மகளாய்
வந்து பிறவேன்
மகிழ்ந்து விளையாடலாம்!

எவ்வளவு அழகாய்
முடிச்சுக்கள்
விழுகின்றது...
வாழ்க்கை அழகு தான்
அவரவர் புரிதல் படி!

பெண்ணே
நினைவுக் கவிதை
என்று நினைத்து தான்
தொடங்கினேன்
ஆனால்
வாழ்க்கையின்
வடிவான பக்கங்களைப்
புரட்டத் தொடங்கிவிட்டேன்

உதிருகின்ற
பூக்களைப் பார்த்து
அழுவதைவிட்டு
மலருகின்ற பூக்களைப் பார்த்து
மகிழ்வதே
உன் நினைவு
எனக்குச் சொல்லும்
பாடம்!

உன் நினைவை
ஏந்திக் கொண்டு
வாழ்வென்னும் பெருங்கடலில்
நீந்தப் போகின்றேன்
ஒரு சமயம்
இருவரும் சந்திக்கலாம்!

Comments

Chandravathanaa said…
வாழ்க்கை
விசித்திரம் தான்
வந்து போகும்
உறவுகளும் அப்படியே...

யாரோ
கிழித்த கோட்டில்
நீயும் நானும்
எப்படிச் சொந்தங்களானோம்?

சாவு அருமையான
விஷயம்!

இறப்பது தெரிந்தும்
'நிரந்தர இருப்பு'
அனுமதி பெற்றது போல
செய்யும் செயல்களில்
தான் எத்தனை
முரண்பாடு?


நன்றாயிருக்கிறது.

அந்தக் குழந்தைக்கு எனது அஞ்சலிகளும்
உங்களுக்கு என் நன்றிகள்... நீங்கள் வந்து சிறப்பான பின்னூட்டல் இட்டதிற்கும் நன்றிகள்...

உங்கள் அஞ்சலி அந்தக் குழந்தைக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்...

Popular posts from this blog

அத்தை மகள்

ஒலி வடிவம்

கவிதைகள் - அட்டவணை