கசங்கிய காகிதங்களோடு…! - IV
அன்னை தெரேசா
ஏழைகளின் மீட்பர் அன்னை தெரேசா, எம்மை விட்டுப் பிரிந்த போது (5 புரட்டாதி 1997) எழுந்த சோகத்தில் இதயம் கக்கிய வார்த்தைகளை ஒழுங்குபடுத்தியபோது…!
வானொலி கூட ஒரு கணம் விசும்பியது
மறுகணம் செய்தி என்னவென்று விளம்பியது
கவலைக் காளான்களால் இதயம் நிரம்பியது
கடவுளே! மனிதக் கடவுளை ஏன் விண்ணுக்கழைத்தாய்
என்றொவ்வோர் மனமும் புலம்பியது!
"அன்னை" என்று அகிலத்தார் அழைக்க
தன்னை உருக்கி ஒளி உமிழும்
மெழுகுவா்த்தியாய்...
முன்னைப் பிறவியில் நாம் செய்த தவத்தால்
பொன்னை நிகர்த்த ஒளி வடிவாம்
அன்பின் மறுவடிவாம்
அன்னை தெரேசா!
அழும் கண்களோடு எமை விட்டு
மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்டார்!
பாழும் கிணற்றில் வீழும் ஏழை வாழ்வை
நாளும் காத்திடவே சீரும் சிறப்பாய்ச்
சிகரம் ஏற்றிடவே
நகரம் பல நாடி - அவா்
வாழ்வு கண்டு மனமிக வாடி
ஏழைகளைக் காத்துநின்றவா்!
எமை ஏங்கவிட்டு எட்டாத இடத்தினுக்குச்
சிட்டாகப் பறந்து விட்டார்! - எமை
விட்டுப் போக அவா் எப்படித் துணிந்துவிட்டார்?
பிணி கொண்டவா் பால் அவா் பிரிந்து நின்றதில்லை
அவரிடம் பரிந்து சென்றார்!
தன் பணி என்னவென்று தானறிந்து
எவரிடமும் உள்ளங் கனிந்து நின்றார்!
தன் பிணி காலத்திலும் தன் பணி மறவாது
உவகையுடன் வாழ்ந்து உலகை வென்றார்!
அகவை பல கண்டும் தன் கடனை
நிறைவுடனே செய்தார்!
நிர்மல மனதுடன் எம்மனங்களில் தன்
நினைவை ஊன்றிச் சென்றார்!
அன்பு,கருணை,அழகு என்றெல்லாம்
எம்மவா் பேசுகின்ற போதினில்
வீசுகின்ற தென்றலில் கூட அவற்றின்
அர்த்தம் ஏறிவரும் - அது
அன்னை தெரேசா என்றே கூறி வரும்!
-வளரும்…
Comments